பணத்தின் பயன் பற்றி மதுரை கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடிய புறநநானுற்று பாடல் (பாடல் எண் :189).
பாடல்:
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்க்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்குமே
செல்வத்து பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே
விளக்கம்:
தெளிந்த கடலால் சூழப்பட்ட எல்லாருக்கும் பொது என்று இல்லாமல் வெண்குடை நிழலில் ஒருவனே ஆளும் அரசனுக்கும் ,நடு இரவிலும் பகலிலும் தூங்காமல் விரைந்து செல்லும் விலங்குகளை வேட்டையாடும் கல்வி அறிவு இல்லாத மனிதனுக்கும், உண்பதற்க்கு தேவை ஒரு நாழி அளவு உணவும் அணிவதர்க்கு இரண்டு ஆடைகளுமே .மற்ற தேவைகளும் இருவர்க்கும் சமமே. செல்வத்தின் பயனே பிறருக்கு கொடுப்பது ஆகும். தானே அனுபவிக்கலாம் என்று நினைப்பவர்கள் பலவற்றை தவற விடுவார்கள்.